அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப், தன் பதவிக் காலத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து கூறியுள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து, அமெரிக்க ஊடகங்கள் ஆய்வு செய்துள்ளன. அதன்படி, நான்கு ஆண்டுகளில் மட்டும் அவர், 30 ஆயிரத்து, 573 பொய் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதிபராக இருந்த முதல் ஆண்டில், சராசரியாக, நாளொன்றுக்கு, ஆறு பொய் தகவல்களை கூறியுள்ளார். இரண்டாம் ஆண்டில், அது 16 ஆக உயர்ந்தது. மூன்றாம் ஆண்டில், 22 ஆகவும், நான்காம் ஆண்டில், 39 ஆகவும் உயர்ந்துள்ளது.கடந்தாண்டு நவ.,3ல் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின் மட்டும், 800 பொய் தகவல்களை அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பல்வேறு உத்தரவுகளை, அதிபராக சமீபத்தில் பதவியேற்றுள்ள, ஜோ பைடனின் நிர்வாகம் ரத்து செய்து வருகின்றது.மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான, டிரம்பின் இரண்டு சர்ச்சைக்குரிய உத்தரவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டிரம்பின் மற்றொரு உத்தரவை ரத்து செய்து, ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, வட்டார அளவில் உள்ள தகவல்களை சேகரிக்க, டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இது தேர்தலின்போது தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, வட்டார அளவில் தகவல்களை தொகுக்க தடை விதித்து, பைடன் உத்தரவிட்டுள்ளார்.