அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி வார்த்தைப் போர் முற்றி வருகிறது.
வூஹான் நகரின் பரிசோதனை கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் மாதிரியை சீன விஞ்ஞானிகள் தங்கள் அஜாக்கிரதை காரணமாக வெளியேற விட்டனர் என கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அரசு அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்க திட்டமிட்டு கொரோனாவைப் பரப்பியுள்ளது என குற்றஞ்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது சீன அரசு திட்டமிட்டு கொரோனாவை பரப்பியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றுள்ளார். வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில் சீனா மீது குற்றஞ்சாட்டி டிரம்ப் அமெரிக்கர்கள் வாக்குகளைப் பெற முயல்கிறார் என அமெரிக்க எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு காரணமாக அதிக வேலை இழப்பு நடைபெற்று வருகிறது. இதனை ஈடுகட்ட டிரம்ப் அரசு வரும் மாதங்களில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டி இருக்கும். இதிலிருந்து அமெரிக்கர்களை திசை திருப்பவே டிரம்ப் சீனாவை குறை கூறுகிறார் என ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.