சமீபத்தில் பிரான்ஸில் ஆசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த முழு விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கல்லூரி அருகே சாமூவேல் பட்டி என்கிற ஆசியர் மீது 18 வயது இளைஞர் ஒருவர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 18 வயது இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இதில் இளைஞர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இதுவரை 10 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் இஸ்லாமியத் தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் குறித்துப் பேசிய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இந்த தாக்குதல் “இஸ்லாமியப் பயங்கரவாத தாக்குதலின்” அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது என்றும் ஆசிரியர் “கருத்து சுதந்திரத்தைக் வெளிப்படுத்தியதால்” கொலை செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் உயிரிழந்த ஆசிரியருக்கு வரும் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
தாக்குதல் மற்றும் விசாரணை பற்றிய விவரங்களை அரசு வழக்கறிஞர் ஜீன்-பிரான்சுவா ரிக்கார்ட் வழங்கியுள்ளார். அதில், அவர் சந்தேக நபருக்கு அப்துலாக் ஏ என்று பெயரிட்டார் – செச்சென் வம்சாவளியைச் சேர்ந்த மாஸ்கோவில் பிறந்த இந்த 18 வயது இளைஞன் சிறுவனாக அகதி அந்தஸ்துடன் பிரான்சுக்கு வந்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்.கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள நார்மண்டி நகரமான Évreux இல் அவர் வசித்து வந்தார், மேலும் ஆசிரியருடனோ அல்லது பள்ளியுடனோ வெளிப்படையான தொடர்பு இல்லை என்றும் இந்த இளைஞன் முன்னதாக நீதிமன்றத்திடம் சிறு சிறு குற்றங்களுக்காக முன்னிறுத்தப்பட்டிருந்தான் என்றும் ஜீன் தெரிவித்துள்ளார்.
மேலும், இளைஞன் சம்பவம் நடந்த தினத்தனது கல்லூரி வளாகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசியரை அடையாளம் காட்டுமாறு கேட்டு ஆசிரியரைப் பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியரின் தலையில் பலத்த காயத்தினை ஏற்படுத்தியுள்ளார். தாக்குதல் நடத்தும் போது இளைஞன் அல்லாஹு அக்பர் என்கிற சொல்லை உச்சரித்தாக சம்பவத்தின் சாட்டியங்கள் கூறியுள்ளதாகவும் ஜீன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இளைஞனைச் சுற்றி வளைத்த காவல்துறையினர் சரணடையுமாறு கேட்டுக்கொண்டதாகவும், இளைஞன் அடிபணிய மறுத்த நிலையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டினை நடத்தியதாகவும் ஜீன் கூறியுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி……பேச்சு சுதந்திரம் குறித்த ஒரு வகுப்பின் போது நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தினை ஆசிரியர் மாணவர்களுக்குக் காட்டியுள்ளார். அப்போதிலிருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது.முன்னதாக பெற்றோர்கள் சிலர் ஆசிரியரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது புகாரையும் கொடுத்து பெற்றோர்களை அணிதிரட்டவும் திட்டமிட்டுந்தனர்.
இதேபோல 2015-ல் முகமது நபி குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காக பிரான்ஸின் சார்லி ஹெப்டோ செய்தி ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் காவல்துறையினர் கைது செய்திருந்த 10 பேரில் தாக்குதல் நடத்திய இளைஞனின் உறவினர்களும் அடங்குவார்கள்.இந்த வழக்கு குறித்த தகவல்களைத் தெரிவித்த அரசு வழக்கறிஞர் ஜீன் “பிரெஞ்சு மண்ணில் மிக உயர்ந்த அளவிலான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது” என்று கூறியுள்ளார்.